பீட்ரூட் விவசாயம்: சந்தையில் வெற்றியடைய எளிய வழிகள்

   பீட்ரூட் சாகுபடி

பீட்ரூட்

   ஊட்டச்சத்து நிறைந்த, கவர்ச்சிகரமான நிறமுடைய பீட்ரூட் (Beetroot) உலகெங்கிலும் சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு வகை பயிர். இதன் இனிப்பு சுவை, பல்வேறு ஆரோக்கிய நன்மைகள், மற்றும் சமையலில் பன்முகப் பயன்பாடு (சாலட், ஜூஸ், பொரியல், சாம்பார்) போன்றவை இதனை விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையே ஒரு கவர்ச்சிகரமான பொருளாக மாற்றியுள்ளன. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், பீட்ரூட் சாகுபடி லாபகரமான ஒரு விவசாயத் தொழிலாக வளர்ந்து வருகிறது. குறைந்த காலத்தில் நல்ல மகசூலைக் கொடுக்கும் இந்தப் பயிர், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு கணிசமாக உதவுகிறது.

     சரியான சாகுபடி முறைகள் மற்றும் திறமையான சந்தைப்படுத்துதல் உத்திகள் ஆகியவை பீட்ரூட் உற்பத்தியில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகும். மண்ணின் தேர்வு, சரியான பருவம், நீர்ப்பாசன மேலாண்மை, உர நிர்வாகம் மற்றும் நோய்த்தடுப்பு போன்ற அறிவியல் பூர்வமான சாகுபடி நுட்பங்கள் நல்ல தரமான, அதிக மகசூல் தரும் பீட்ரூட்டை உற்பத்தி செய்ய அவசியமாகிறது. அதேபோல, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, தரம் பிரிதல், பொதி செய்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது போன்றவை விளைபொருளுக்கு நல்ல விலையைப் பெற்று தந்து, விவசாயிகளின் லாபத்தை உறுதி செய்கிறது.

     பீட்ரூட் சாகுபடிக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், அதனை பயிரிடும் முறை, பராமரிப்பு நுட்பங்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய திறமையான உத்திகள் ஆகியவற்றை விரிவாக பார்ப்போம்.

1. பீட்ரூட் சாகுபடி (Beetroot Cultivation)

     இது ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த கிழக்கு வகை காய்கறியாகும்.

     A. வகைகள்:

     ஊட்டி 1, கிரிம்சன்குளோப், டெட்ராய்ட் அடர் சிகப்பு, சிவப்பு பந்து.

     B. மண்:

     பீட்ரூட் அனைத்து வகையான மண்ணிலும் வளரும். ஆனால், மிருதுவான மணற்பாங்கான தோட்ட மண் அல்லது கரிசல் மண் மிகவும் ஏற்றது. கடினமான நிலத்தை தவிர்க்க வேண்டும். மண்ணின் கார அமிலத்தன்மை (pH) 6 முதல் 7 வரை இருப்பது நல்லது.

     C. தட்பவெப்ப நிலை:

     பீட்ரூட் குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும். 18°C முதல் 25°C வரையிலான வெப்ப நிலை வளர்ச்சிக்கு உகந்தது. வெயில் அதிகமாக இருக்கும் கோடைகாலத்தில் விளைச்சல் குறைவாக இருக்கும்.

     D. பருவம்:

     ஜூலை - ஆகஸ்ட் மாதங்கள் பீட்ரூட் சாகுபடிக்கு ஏற்றவை.

     E. நிலம் தயாரித்தல்:

     நிலத்தை 2- 3 முறை உழுது, கட்டிகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும். கிழங்குகள் சிதையாமல் வளர, நிலத்தை 15-20 செ. மீ ஆழத்திற்கு உழுது பயன்படுத்த வேண்டும். (30 செ. மீ இடைவெளியில்) பார்கள் அமைக்க வேண்டும்.

     F. விதை மற்றும் விதைப்பு:

     ஒரு ஹெக்டருக்கு 6 - 7 கிலோ தரமான விதைகள் தேவை. விதைகளை 10 செ.மீ இடைவெளி விட்டு, பார்களின் பக்கவாட்டில் விதைக்க வேண்டும். கடினமான கோடை காலத்தில் நல்ல முளைப்புத்திறனுக்கு இரண்டு விதைகள் நடலாம்.

     G. உர நிர்வாகம்:

     ஒரு ஹெக்டருக்கு அடியுரமாக 20 டன் தொழு உரம் (அல்லது 7 டன் கோழி உரம்) தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 160, சாம்பல் சத்து 100 கிலோ இடவேண்டும். அதேபோல் மேலுரமாக விதைத்த ஒரு மாதம் கழித்து 60 கிலோ தழைச்சத்து இட வேண்டும்.

     H. நீர் நிர்வாகம்:

     விதைத்தவுடன் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு, மண்ணின் தேவைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பீட்ரூட் வளர்ச்சிக்கு சீரான மண் ஈரம் மிகவும் அவசியம். சொட்டு நீர் பாசனம் சிறந்தது.

     I. களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி:

     விதைத்த 20-வது நாளில் களை எடுக்க வேண்டும். பீட்ரூட் விதையிலிருந்து பல செடிகள் முளைக்கும். களை எடுக்கும் போது, வளமான செடிகளை குத்துக்கு ஒன்று வீதம், மற்றவற்றை கலைத்து விட வேண்டும்.

     J. பயிர் பாதுகாப்பு:

     வண்டுகள் மற்றும் இலைச்சுருட்டுப் புழு: மாலத்தியான் (2மில்லி/லிட்டர் நீர்) தெளிக்க வேண்டும்.
     இலைப்புள்ளி நோய்: மேன்கோசெப் (1 கிலோ/ஹெக்டர்) தெளிக்க வேண்டும்.
     வேரழுகல் நோய்: 0.1% கார்பெண்டாசிம் மருந்தை செடிகளுக்கு அருகில் ஊற்றி கட்டுப்படுத்தலாம்.
பீட்ரூட்

2. அறுவடை

     பீட்ரூட் விதைத்த 60-90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கிழங்குகளில் வட்டமான வெண்மை நிறகோடுகள் முழுமையாக பரவுவதற்கு முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.
     ஒரு ஹெக்டேருக்கு 20-25 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 2,000 கிலோ வரை மகசூல் கிடைக்கலாம்.

3. விற்பனை முறை

     பீட்ரூட் அறுவடைக்கு பிறகு, அதைச் சந்தைப்படுத்துவது மிகவும் முக்கியம். நல்ல விலையைப் பெற சில வழி முறைகள்:

     A. அறுவடை மற்றும் சுத்தம் செய்தல்:

     அறுவடை செய்த பீட்ரூட்டை மண்ணை அகற்றி, தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இது அதன் தோற்றத்தை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

     B. தரம் பிரித்தல்:

     பீட்ரூட் அளவு, வடிவம் மற்றும் சேதம் ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரிப்பது அவசியம். நல்ல தரமான பீட்ரூட்டிற்க்கு அதிக விலை கிடைக்கும்.

     C. பொதி செய்தல்:

     பீட்ரூட்டை பைகளில் அல்லது கிரேட்டுகளில் கவனமாக பொதி செய்ய வேண்டும். இது போக்குவரத்தின்போது சேதமடைவதைத் தடுக்கும்.

     D. விற்பனை வாய்ப்புகள்:

     உள்ளூர் சந்தைகள் (சந்தை கமிஷன்): உழவர் சந்தைகள் அல்லது தினசரி காய்கறி சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்யலாம். சாலையோர கடைகள் அமைத்தும் விற்பனை செய்யலாம். இது விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித்தரும்.
     மொத்த வியாபாரிகள்: பெரிய அளவில் உற்பத்தி செய்தால், மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யலாம். இவர்கள் நேரடியாக தோட்டத்தில் வந்து வாங்கிச் செல்வார்கள்.
     அண்டை மாநிலம்: தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யபடும் பீட்ரூட் உடுமலை, பொள்ளாச்சி மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
     உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள்: பெரிய உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளுக்கு நேரடியாக விற்பனை செய்யலாம்.
     மண்டிகள்: முக்கிய காய்கறி மண்டிகளில் விற்பனை செய்யலாம்.
     மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்: பீட்ரூட் ஜூஸ், ஜாம், சிப்ஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம்.
     ஆன்லைன் விற்பனை: இப்போதைய டிஜிட்டல் உலகில், ஆன்லைன் மூலம் பீட்ரூட்டை  விற்கவும் வாய்ப்புகள் உள்ளன (உள்ளூர் டெலிவரி சேவைகளுடன் இணைந்து).

     E. விலை நிர்ணயம்:

     சந்தை நிலவரம், பீட்ரூட் தரம், போக்குவரத்து செலவுகள் மற்றும் பிற உற்பத்தி செலவுகளைப் பொறுத்து விலையை நிர்ணயிக்க வேண்டும். சில சமயங்களில் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைய வாய்ப்புள்ளது. எனவே, பல கட்டங்களாக அறுவடை செய்யும் வகையில் சாகுபடி செய்வது நல்லது.

முக்கிய குறிப்புகள்:

     குறுகிய கால சாகுபடியான பீட்ரூட், 80 முதல் 90 நாட்களில் அருவடைக்குத் தயாராகிவிடுவதால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
     கோடை காலத்தில் மகசூல் குறைவாகவும், குளிர் காலத்தில் மகசூல் அதிகமாகவும் இருக்கும்.
     சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் நீர் செலவைக் குறைக்கலாம்.

     பீட்ரூட் சாகுபடி மற்றும் விற்பனைக்கு சரியான திட்டமிடலும், சந்தை தேவைகளைப் புரிந்து கொள்வதும் லாபகரமான ஒரு விவசாய தொழிலாக மாற்ற உதவும்.

கருத்துகள்